இனி தமிழகம் வெல்லும்! தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி: மு.க.ஸ்டாலின் அறிக்கை
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! '
ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்' என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.
எத்தனை சோதனைகள் - வேதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
உங்களுக்காக உழைப்பேன்!
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
தமிழகம் வெல்லும்! pic.twitter.com/w4rpr5Zeva
கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. தோள் கொடுத்த கூட்டணிக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் அமையப் போவது நாம் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.
கழகம் வென்றது! - அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்! என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.