மக்கள் நீதி மய்யத்தின் கடைசி நம்பிக்கை... கோவை தெற்கில் மலர்ந்த தாமரை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கடும் இழுபறிக்கு பிறகு, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற, கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ல் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.
அண்ணா, கலைஞருக்கு பிறகு திமுக சார்பில் ஸ்டாலின் முதல்வராகிறார். தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய மூன்றும் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில், இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிக நேரம் முன்னிலையில் இருந்தவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
அதன்பிறகு பிற்பகலில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலை பெறத் தொடங்கினார். ஆனால் அடுத்த சுற்றுகளில் மீண்டும் கமல்ஹாசன் முன்னிலை பெற்றார்.
நட்சத்திர அந்தஸ்து கொண்ட இத்தொகுதியில், கமல் - வானதி இடையே கடும் போட்டி நீடித்தது. வானதியை பொறுத்தவரை செல்வாக்கு நிறைந்த தொகுதி இது. நிச்சயம் அவர் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம், கமல் இதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த பின், களம் சூடானது. 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியிடாமல், கட்சியை மட்டும் களமிறக்கிவிட்டிருந்த கமல், இந்த சட்டமன்ற தேர்தலில், முதன் முதலாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தார்.
அதற்கு ஏற்றார் போல் துவக்கமும் அவருக்கு சாதகமாவே இருந்தது. ஆனால், இறுதியில் வானதி 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது.