மதுரை பொங்கல் விழாவில் இந்திய பிரதமர் மோடி! 50 ஜல்லிக்கட்டு காளைகளுடன் பிரம்மாண்டமாக வரவேற்க திட்டம்
தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழ்நாடு பாஜக சார்பில், மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில், வரும் ஜனவரி 12ம் திகதி பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.
1000 பொங்கல் பானைகள் வைத்து இந்த பொங்கல் விழா நடத்தப்படுவதோடு, 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, தமிழ்நாடு பாஜக சார்பில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவை முடித்துவிட்டு, விருதுநகரில் நடைபெறும் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.