பட்டப்பகலில் குழந்தையைக் கடத்திய மர்ம நபர்... தாய் செய்த துணிச்சலான செயல்
அமெரிக்காவில் பட்டப்பகலில் தன் தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயலும் காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளன.
அமெரிக்காவில் Queens என்ற இடத்திலுள்ள சாலை ஒன்றில் தன் கணவரை சந்திப்பதற்காக, தன் பிள்ளைகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் Dolores Diaz Lopez (45) என்ற பெண்.
அப்போது, கார் ஒன்றில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென காரை விட்டிறங்கி ஓடிவந்து, அந்த குழந்தைகளில் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்று தனது காரில் ஏற்றியிருக்கிறார்.
Jacob என்ற அந்த 5 வயது சிறுவனை யாரோ தூக்கிச்செல்வதைக் கண்டு பதறிய Dolores, கடவுளே ,என் பிள்ளை என கத்தியபடி அந்த நபருக்கு பின்னால் ஓடியிருக்கிறார்.
அந்த நபர் குழந்தையை காருக்குள் ஏற்றி விட்டு மறுபக்கம் சென்று காரில் ஏற, மற்ற குழந்தைகள் தங்கள் சகோதரனை விட்டு விடுங்கள் என கதற, அதற்குள் காரிலிருந்த தன் மகனை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாகவே இழுத்து வெளியே எடுத்துவிட்டார் Dolores. தன் திட்டம் தோற்றுப்போனதை அறிந்த அந்த நபர் காரில் ஏறி தப்பிவிட்டார்.
குழந்தையைக் கடத்த முயன்றவரும் மற்றொருவரும் நடமாடும் காட்சிகள் CCTV கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதையடுத்து, அதன் அடிப்படையில் பொலிசார் அவர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.
ஏற்கனவே நியூயார்க், துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் பார்த்து வரும் நிலையில், பட்டப்பகலில் குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.