மருத்துவமனையை நாடும் பிரித்தானிய சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் Omicron தொற்றால் மருத்துவமனையை நாடும் சிறார்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு Omicron தொற்றால் கடுமையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு கூட்டத்தில் இது தொடர்பில் நிபுணர்கள் குழு விவாதித்துள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவின் முன்னணி குழந்தைகள் நல மருத்துவர்கள் இதை உறுதிப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.
டிசம்பர் 14 முதல் ஜனவரி 12 வரையிலான மருத்துவமனை தரவுகளிள், அனுமதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட கொரோனா நோயாளிகளில் 42% ஒரு வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இது கொரோனா பரவல் கண்டறியப்பட்டு கடந்த டிசம்பர் வரையான காலகட்டத்தில் 31% அதிகரிப்பு என கூறப்படுகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களில் வெகு சிலருக்கே தீவிர சிகிச்சை அல்லது செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஐந்தில் நான்கு குழந்தைகள் காய்ச்சல் அல்லது இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
குழந்தைகளில் கொரோனா அறிகுறிகள் தொடர்பில் உறுதியான விளக்கம் அளிக்க தற்போதைய சூழலில் முடியாது என கூறியுள்ள மருத்துவர்கள், பெற்றோர் அதிகம் கவலைப்படுவதாலையே, மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இருப்பினும், குழந்தைகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், NHS மருத்துவமனைகள் தயார் நிலையிலேயே இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 14 முதல் ஜனவரி 12 வரை 18 வயதுக்குட்பட்ட 405 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 171 பேர் 1 வயதுக்குட்பட்டவர்கள், 78 பேர் 1-4 வயதுடையவர்கள், 78 பேர் 5-11 வயதுடையவர்கள் மற்றும் 78 பேர் 12-17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.