கடந்த 2 நாட்களில் படகுகள் மூலம் 1,100 பேர் பிரித்தானியாவுக்குள் நுழைவு!
பிரித்தானியாவுக்குள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆங்கிலேய கால்வாய் வழியாக சிறிய படகுகள் மூலம் நுழைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று 624 பேரும், சனிக்கிழமையன்று 491 பேரும், மொத்த 40 படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானிய நிலத்தில் குடியேறியதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதே வெள்ளிக்கிழமை 300 பேரையும், சனிக்கிழமை 114 போரையும் பிரெஞ்சு கடற்படை ஆங்கில கால்வாயை கடக்க முயன்றபோது தடுத்து நிறுத்தியதாக அறிவித்தனர்.
இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் நுழைந்ததற்கு பிரான்ஸ் நாட்டிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில், அதற்கு முந்தைய 10 நாட்களில் ஒருவர் கூட பிரித்தானியாவுக்குள் குடியேரியதாக கணக்கிடப்படவில்லை.
Picture: Alamy
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gerald Darmanin), சனிக்கிழமையன்று Dunkirk-ல் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆங்கில கால்வாய் வழியாக குடியேறுபவர்களை தடுத்து நிறுத்தும் பணிக்கு உதவியாக பிரித்தானிய அரசாங்கம் பிரான்சுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்த பணத்தை முதலில் தருமாறு வலியுறுத்தினார்.
அனால், அதற்கு நேர்மாறாக பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் கூறுகையில், அதிக மக்கள் பிரித்தானியாவை அடைவதைத் தடுக்காவிட்டால் அந்த நிதியை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை, இந்த 1,100 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இதுபோல் ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.