வெளியே வந்தால் அது தாக்கிவிடும்…3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராத தாய், மகள்!
கொரோனா வைரஸ் தாக்கி விடும் என்ற அச்சத்தில் வீட்டுக்குள் சென்று பூட்டிக் கொண்ட தாயும் மகளும் மூன்று ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளனர்.
3 ஆண்டுகளாக வெளிவராத தாய்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேரு கிராமத்தைச் சேர்ந்த கர்நீதி கே. சூரிய பாபு என்பவரின் மனைவி மணி(44) மற்றும் மகள் துர்கா பவானி(20) ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவும், தங்களை யாரேனும் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேறாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
கணவர் சூரிய பிரபு மட்டும் வெளியே சென்று உணவு பொருட்கள் வாங்கி வந்து சமைத்து வீட்டின் ஜன்னல் வழியாக மனைவி மற்றும் மகளுக்கு தொடர்ந்து சாப்பாடு வழங்கி வந்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும், மணி மற்றும் துர்கா பவானி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன் சூரிய பிரபுவை ஜன்னல் வழியாக உணவு வழங்கவும் இருவரும் அனுமதிக்கவில்லை, இதனால் அருகாமையில் உள்ள மற்றொரு வீட்டில் கணவன் தங்கி சமைத்து, அதை வீட்டின் கதவின் அருகே வைக்க, அதன் பிறகு அதை உள்ளே எடுத்து சென்று இருவரும் சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் இருவரின் உடல் நிலையும் மோசமடையவே, கணவர் சூரிய பிரபு உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள், மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து மணி மற்றும் துர்கா பவானி இருவரையும் மீட்க வந்த பொலிஸாரும், சுகாதாரத்துறை ஊழியர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர், ஆனால் உறவினர்கள் யாரோ தங்களை கொலை செய்ய வந்து இருப்பதாக கருதி கதவை திறக்க மறுத்துவிட்டனர்.
பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மீட்பு பொலிஸார் மனைவி மணி மற்றும் மகள் துர்கா பவானி இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருவரது உடல்நிலை குறித்தும் பேசிய காக்கிநாடா அரசு மருத்துவமனை டாக்டர் ஹேமலதா, இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து பரிசோதித்து வருவதாகவும், தேவைப்பட்டால் உளவியல் நிபுணர் மூலம் சிகிச்சை அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மனைவி மற்றும் மகள் குறித்து பேசிய சூர்ய பிரபு, கடந்த 3 ஆண்டுகளாக மனைவி மணியும், மகள் பவானியும் ஒரே போர்வையில் தான் படுத்து தூங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.