குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்ற தாய் செய்த துணிகர செயல்! கண்கலங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவில் பெண் ஒருவர் தனது குழந்தையை கவ்வி சென்ற சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் சுற்று வட்டார பகுதியில் பாய்கா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் வசித்து வருபவர் கிரண் பாய்கா.
கடந்த மாதம் 30ஆம் திகதி அன்று கிரண் தன் கணவருக்காக வீட்டின் வெளியே தனது 4 குழந்தைகளுடன் அமர்ந்துள்ளார். அப்போது அப்பகுதியில் பதுங்கிருந்த சிறுத்தை ஒன்று அவரது 6 வயது மகனான ராகுலை கவ்வி கொண்டு ஓடியது.
இதை சற்றும் எதிர்பாராத கிரண் உடனே சிறுத்தையை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை கண்ட அவர், சற்றும் அஞ்சாமல் வெறுங்கைகளுடன் சிறுத்தையுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
கடும் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையின் பிடியில் இருந்த குழந்தையை மீட்டார். அந்த குழந்தையின் உடலில் நகக் கீறல்களும், பல்லால் ஏற்பட்ட காயங்களும் ஏற்பட்டன.
சிறுத்தையுடனான போராட்டத்தில் வெற்றி பெற்ற கிரண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளதை கண்ட கிராம மக்கள் கிரணையும் குழந்தையையும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட அந்த பெண்ணுக்கு பல பாராட்டுகள் குவிந்து வருகின்றது.