இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்!
விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த மகனே தனது தாய் தந்தையை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியை அடுத்த சிறுவை கிராமத்தை சேர்ந்த விவசாயி தம்புசாமி (78) இவரது மனைவி தனகோடி (70) இவர்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
விவசாயம் செய்து வரும் தம்புசாமிக்கு 2.5 ஏக்கர் விவசாய நிலம் தனது மனைவி பெயரில் உள்ளது. அந்த நிலத்தில் 2 ஆவது மகன் மோகன்தாஸ் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இட்லி தயார் செய்வதற்காக தனகோடி, மாவினை எடுத்து வந்தார். அப்போது மாவின் நிறம் நீல நிறமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து இவர்கள் மனு ஒன்றை வழங்கியுள்ளார், அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் இருவரையும் சரியாக கவனிக்காமல் உணவு கூட அளிக்காமல் துன்புறுத்தி வருகிறார். மேலும் எங்கள் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்கும் படி மோகன்தாஸ் கேட்டு கடந்த ஒரு வாரமாக எங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி வருகிறார் .
மயிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியும் உள்ளார். ஆனால் அதற்கு மறுத்து எங்களுடைய வீட்டிலேயே இருந்தோம்.
இந்த சூழலில் சொத்துக்காக பெற்ற மகனே உணவில் விஷம் வைத்து எங்களை கொலை செய்ய சதி செய்துள்ளது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுபற்றி மோகன்தாசிடம் கேட்டதற்கு சொத்துக்களை எனக்கு எழுதி தராத நீங்கள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டுமென கூறியதோடு மாவில் பூச்சி மருந்தை கலந்ததாகவும் கூறினார்.” எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மேலும் மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். குறித்த சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.