தீவிர தாகம்... வாந்தி எடுத்து சுருண்டு விழுந்து இறந்த இந்திய தாயார்: பிரித்தானியாவில் சம்பவம்
தீவிரமான தாகம் மற்றும் தொண்டை வரட்சி காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட இளம் தாயார் ஒருவர் சிகிச்சைக்காக காத்திருக்கும் வேளையில் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை, அக்டோபர் 9ம் திகதி பர்மிங்காமில் உள்ள ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
37 வயதான ஸ்மிதா பட்டேல் என்பவர் கடுமையான தொண்டை வரட்சி மற்றும் தீவிரமான தாகம் காரணமாக கணவருடன் மருத்துவமனையை நாடியுள்ளார்.
இதனிடையே தனியாக இருக்கும் தங்களின் பிள்ளைகளை நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு வரலாம் என ஸ்மிதாவின் கணவர் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையிலேயே ஸ்மிதாவின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
திடீரென்று வாந்தி எடுத்த அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். சனிக்கிழமை 6.30 மணிக்கு அவரது கணவர் மருத்துவமனைக்கு திரும்பியபோது ஸ்மிதா இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது என ஸ்மிதாவின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல், ஸ்மிதா தொண்டை வரட்சி மற்றும் தீவிர தாகம் தொடர்பில் கணவரிடம் கூறி வந்துள்ளார். கணவர் குடியிருப்புக்கு திரும்பியதும், நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே, ஸ்மிதா திடீரென்று மரணமடைந்துள்ளார். இந்தியரான ஸ்மிதா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறியதுடன் Shirley பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.
மட்டுமின்றி Jaguar Land Rover நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றியும் வந்துள்ளார். உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் ஸ்மிதா பட்டேல்.
இந்தியர்கள் பலருக்கு பிரித்தானியாவில் குடியேற வாய்ப்பமைத்தும் தந்துள்ளார். ஸ்மிதாவின் திடீர் மரணம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதுடன், அவருக்கு அறிமுகமான பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.