புயலால் நடுக்கடலில் சிக்கிய 410 பேர்! பலரின் கதி தெரியாததால் அச்சம்?
டவ்தே புயலால் நடுக்கடலில் சிக்கிய படகில் இருந்து இதுவரை 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் நேற்று கரையை கடந்த டவ்தே புயல் மும்பையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.
மேலும் இரவு வரை மும்பை விமான நிலையம் மூடப்பட்டதோடு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பேருந்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் 600 மரங்கள் ஒடிந்து விழுந்ததோடு மட்டுமல்லாமல் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். டவ்தே புயலால் மும்பையில் 214 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை அருகில் நடுக்கடலில் ஹீரா எண்ணெய்க் கிணற்றுக்கு அருகில் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் தங்குமிடமாக நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய படகில் 273 பேர் இருந்தனர்.
புயலால் நங்கூரமிடப்பட்டிருந்த அந்தப் படகு காற்றில் நகரத் தொடங்கியது. போராடி அதை மீண்டும் நங்கூரமிட்டு நிலை நிறுத்தியபோதும் அங்கிருந்த எண்ணெய்கிணற்றில் மோதியது.
இதனைத்தொடர்ந்து கடற்படை கப்பல்கள் ஹீரா எண்ணெய்க் கிணறு நோக்கிச் சென்றது. மூன்று கப்பல்கள் சம்பவ இடத்தை அடைந்து படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
ஹெலிகாப்டர் உதவியுடன் தொடர்ந்து தேடியதில் இன்று காலை வரை 177 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர்.எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.