மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்! மும்பையில் துஷ்பிரயோகம் செய்து பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் மரணம்!
இந்தியாவின் மும்பை புறநகரில் துஷ்பிரயோகம் செய்து, துன்புறுத்தப்பட்ட 34 வயதான பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மும்பையின் சகிநாகா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில், வெள்ளிக்கிழமை இரவு 34 வயதான பெண் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும், அவரை ஒருவர் தாக்குவதாகவும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த பெண்ணை மீட்டு ராஜவாடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பு இரும்பு கம்பி மூலம் சிதைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்
. அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அந்த பெண் இன்று உயிரிழந்தார்.
பொலிஸ் விசாரணையில் இவர், சாலையோரத்தில் வசித்து வந்ததும், கிடைக்கும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றிய பொலிஸார், அதில் ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மோகன் சவுகான் (45) என்பவரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை செப்டம்பர் 21-ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாஹாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கடும் கண்டனத்திற்குரியது. மனித நேயத்திற்கு எதிரானது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் என்று கூறினார்.
தேசிய பெண்கள் ஆணையமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், விரைவாக விசாரணை நடத்தவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.