கடைசி நொடியில் கருணை மனு நிராகரிப்பு: விஷ ஊசியால் தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் கடை ஊழியர்கள் மூவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற குற்றவாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்பு தமது குடும்ப உறுப்பினர்கள் மீது பாசம் அதிகம் என குறிப்பிட்டுள்ள அவர், கண்டிப்பாக தாம் சொர்க்கத்திற்கு செல்வேன் என தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை 6.11 மணியளவில் மிசோரி மாகாணத்தில் உள்ள Bonne Terre மாகாண சிறைச்சாலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது கருணை மனுவை கடைசி நொடியில் நிராகரித்ததை அடுத்தே, செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 1994ல் கொலம்பியாவில் தமது வீட்டுக்கு அருகிலுள்ள அங்காடி ஒன்றில் மூன்று ஊழியர்களை சுத்தியலால் தாக்கியும், கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளார் Ernest Lee Johnson.
தொடர்ந்து அவர்கள் சடலங்களை ஒரு நடைபாதை பாலத்தின் அடியில் மறைவு செய்ததுடன், அந்த அங்காடியில் இருந்து பணத்தையும் திருடியுள்ளார். இந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட Ernest Lee Johnson மீது 1995ல் கொலை வழக்கு பதியப்பட்டது.
ஆனால் Ernest Lee Johnson மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர் எனவும், அவரால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாது எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். இருப்பினும், அவர் தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், குறித்த அங்காடியை கொள்ளையிட்டு, அந்த பணத்தில் அவர் போதை மருந்து வாங்கியதாக கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
மேலும், அவரது காதலியின் குடியிருப்பில் இருந்து 443 டொலர் தொகையும், வங்கி காசோலைகளும் பொலிசாரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.