இந்து கோவிலில் இஸ்லாமிய ஜோடிக்கு நிக்காஹ்! மொத்த ஊரும் ஒத்துழைப்பு
மத நல்லிணக்க செய்தியாக, சிம்லாவின் ராம்பூரில் உள்ள இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய திருமணம்
மத நல்லிணக்க செய்தியை வழங்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) இமாச்சல பிரதேசத்தில், சிம்லா மாவட்டம் ராம்பூரில் உள்ள இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் தாக்கூர் சத்தியநாராயணன் கோவில் வளாகத்தில் இந்த திருமணம் நடந்தது. இந்த விழாவை இஸ்லாமிய, இந்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Twitter@SheetalPronamo
மௌலவி, சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் நிக்காஹ் நடைபெற்றது. மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய செய்தியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திருமணம் நடைபெற்றது.
அனைவரும் ஒத்துழைப்பு
சத்யநாராயண் கோவில் வளாகம் விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS-ன் மாவட்ட அலுவலகமாகும். "விஎச்பியும் ஆர்எஸ்எஸ்ஸும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இங்கு இந்து கோவில் வளாகத்தில் முஸ்லிம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். சனாதன தர்மம் எப்பொழுதும் அனைவரையும் முன்னோக்கி நகர்த்தவும் அனைவரையும் அழைத்துச் செல்லவும் தூண்டுகிறது என்பதை இது காட்டுகிறது" என தாக்கூர் சத்யநாராயண் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் வினய் சர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து மணமகளின் தந்தை மகேந்திர மாலிக் கூறும்போது, “எனது மகளின் திருமணம் ராம்பூர் சத்யநாராயண் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்த ஊர் மக்களும், கோவில் அறக்கட்டளையினரும் தீவிரமாக ஒத்துழைத்தனர்.
அவர் தனது மகள் எம் டெக் சிவில் இன்ஜினியர் மற்றும் தங்கப் பதக்கம் வென்றவர் என்றும் தனது மருமகன் சிவில் இன்ஜினியர் என்றும் கூறினார்.