நான் மட்டும் கேப்டனாக இருந்தால் உலகின் எந்த அணியிலும் ஹர்திக் பாண்டியாவை எடுப்பேன்! புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான் முரளிதரன்
இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தனிச்சிறப்புமிக்க வீரர் என இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழ்ந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹார்திக் பாண்டியா வேகபந்து வீச்சு + பேட்டிங் ஆல்-ரவுண்டாக செயல்படக் கூடியவர். தற்போதுள்ள இந்திய அணியில் இவருக்கு மாற்று யாரும் இல்லை என்பதால், பாண்டியாவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர் 2019ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதிலிருந்து தொடர்ந்து பந்துவீசாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சில ஓவர்கள் வரை மட்டுமே வீசினார்.
ஐபிஎல் 14ஆவது சீசனின்போது தோள்பட்டை பிரச்சினை காரணமாகப் பந்துவீசவில்லை. ஹார்திக் பாண்டியா பேட்ஸ்மேனாக மட்டும் இருக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. வேகப்பந்து வீச்சு + பேட்டிங் ஆல்-ரவுண்டருக்குத்தான் பஞ்சம். இதனால் ஹார்திக் பாண்டியா விரைவில் பந்துவீச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹார்திக் சிறப்பாக சோபிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியிலும் சிறப்பாக சோபிக்கவில்லை.
இதனால், அவர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட அதிக வாய்ப்பிருக்கிறது எனக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா குறித்து இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ஹர்திக் பாண்டியா தனிச்சிறப்புமிக்க வீரர். நான் மட்டும் கேப்டனாக இருந்தால், உலகின் எந்த அணியிலும் அவரை எடுப்பேன். அவரிடம் அளவுக்கு அதிகமாகத் திறமைகள் உள்ளது. 140 கிமீ வேகத்திற்குமேல் பந்துவீசக்கூடியவர்.
அவ்வப்போது வேகத்தைக் குறைத்தும் பந்துவீசக் கூடியவர். 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் தற்போது முன்புபோல் பந்துவீச முடியவில்லை எனக் கூறியுள்ளார்.