கேரளா ஸ்டைல் மட்டன் நெய்ச்சோறு: எப்படி செய்வது?
பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.
அதிலும் இந்த கேரளா ஸ்டைல் மட்டன் நெய்ச்சோறு மணமும் சுவையும் அனைவரின் நாக்கையும் அடிமையாக்கிவிடும்.
இந்த சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன்- 1/2 கிலோ
- தயிர் - 100 மிலி
- புதினா இலைகள் - 1 கைப்பிடி
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பாசுமதி அரிசி - 2 கப்
- நெய் - 250 கிராம்
- தேங்காய் எண்ணெய் – கால் கப்
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 5
- பட்டை - 1 துண்டு
- சீரகம் - 1 ஸ்பூன்
- அன்னாசிப் பூ - 1
- கல்பாசி - 2
- பெரிய வெங்காயம் - 3
- இஞ்சி-பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் - 6
- முந்திரி - ஒரு கைப்பிடி
- உலர் திராட்சை - ஒரு கைப்பிடி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்த மட்டன், தயிர்,புதினா இலைகள், எலுமிச்சை சாறு, மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பின் ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், அன்னாசிப் பூ, மற்றும் கல்பாசி சேர்த்து பொரிக்கவும்.
அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
பின் அதில் கலந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கி குக்கரை மூடி 8 விசில் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மட்டனில் உள்ள தண்ணீரோடு மேலும் 3 கப் தண்ணீர் சேர்த்து, அதில் கழுவிய அரிசியை சேர்த்து கொதிக்க வைக்க வேணடும்.
கொதித்ததும், அடுப்பை அதிக தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவேண்டும்.
ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வெந்த சாதத்தின் மேல் சேர்க்க வேண்டும்.
மீண்டும் குறைந்த வெப்பத்தில் 10 நிமிடங்கள் இதை அடுப்பில் வைக்க வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடங்கள் அப்படியே வைத்திவிட்டு, குக்கரைத் திறந்து சாதத்தை கிளறிவிட்டால் சுவையான மட்டன் நெய்ச்சோறு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |