போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய குழந்தை வழக்கு... ஜேர்மன் அதிகாரி முக்கிய தகவல்
பிரித்தானிய குழந்தை ஒருத்தி போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கு 14 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே செல்லும் நிலையில், தற்போது வழக்கு தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக ஜேர்மன் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க வருமாறு மக்களுக்கு அழைப்புக் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஜேர்மன் விசாரணை அதிகாரியான Hans Christian Wolters, வழக்கு தொடர்பாக பல முக்கிய துப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே, சில மாதங்களுக்குள் வழக்கு தீர்க்கப்பட வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த கேட் மற்றும் கெரி மெக்கேன், தங்கள் பிள்ளைகளுடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது தங்கள் குழந்தைகளை வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு நண்பர்களுடன் உணவருந்தச் சென்றிருக்கிறார்கள் அவர்கள்.
அப்போது யாரோ ஒரு நபர் அவர்களது குழந்தைகளில் ஒருத்தியான மேட்லின் மெக்கேனை படுக்கையிலிருந்து தூக்கிச் சென்றுவிட்டான்.
சுமார் 14 ஆண்டுகளாகியும் மேட்லின் கிடைக்கவில்லை. இதற்கிடையில், வன்புணர்வு குற்றத்திற்காக ஜேர்மன் சிறையிலிருக்கும் Christian Brueckner என்னும் நபர் மேட்லினை கடத்தி கொலை செய்ததாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில்தான், தற்போது தங்களுக்கு சுவாரஸ்யமான துப்புக்கள் கிடைத்துள்ளதையடுத்து, வழக்கின் இறுதி கட்டத்தில் Bruecknerஐ விசாரிக்க இருப்பதாகவும், வழக்கு தீர்க்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் Hans Christian Wolters.