தடுப்பூசிகளால் இரத்தக்கட்டிகள் உருவாகுவதன் மர்மம் இதுதான்... தீர்வும் கிடைத்தது என்கிறார்கள் ஜேர்மன் அறிவியலாளர்கள்
ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிகளால் சிலருக்கு இரத்தக்கட்டிகள் உருவானது உலகமறிந்த ஒரு விடயம். குறிப்பாக, 50 வயதுக்கு குறைவான பெண்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்கள்.
இதுவரை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் 309 பேர் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 56 பேர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்கள். மொத்த ஐரோப்பாவிலும் 142பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவைப் பொருத்தவரை ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் 28 பேர் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், ஜேர்மனியின் பிராங்க்பர்டிலுள்ள Goethe பல்கலைக்கழகம் மற்றும் Helmholtzஇலுள்ள Ulm பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள், எதனால் இந்த தடுப்பூசிகளால் இரத்தக்கட்டிகள் பிரச்சினை உருவாகிறது என்பதைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, சில நோய்களுக்கு மருந்துப் பொடியை கேப்சூல்களுக்குள் வைத்து விழுங்குவோம் அல்லவா, அதே போல, இந்த கொரோனா தடுப்பு மருந்தை உடலுக்குள் கொண்டு சேர்க்க கேப்சூல் போல் பயன்படுவது ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்! அந்த ஜலதோஷ வரஸின் ஒரு பாகத்தை மரபியல் முறையில் உடைத்து எடுத்துவிட்டு, அந்த இடத்தில் கொரோனா வைரஸின் ஒரு துண்டை ஒட்டவைத்து, ஊசி மூலம் உடலுக்குள் செலுத்திவிடுவார்கள். அதுதான் தடுப்பூசியிலுள்ள மருந்து.
நம் உடல், உடலுக்குள் ஏதோ நோய்க்கிருமி வந்துள்ளது என்பதை உனர்ந்துகொண்டு, அதை அழிப்பதற்காக ஆன்டிபாடிகளை உருவாக்கும். பின்னாட்களில், உண்மையாகவே உங்கள் உடலுக்குள் கொரோனா வைரஸ் நுழையும்போது, அதை எதிர்த்து இந்த ஆன்டிபாடிகள் போராடும்.
இதுதான் தடுப்பூசிகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியின் பின்னணியிலுள்ள தத்துவம். ஆனால், இப்போது இந்த ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியில் என்ன நடக்கிறது என்றால், உடலுக்குள் அனுப்பப்படும் தடுப்பு மருந்து, அதாவது, கொரோனா வைரஸின் துண்டு, ஒரு செல்லில் உள்ள திரவத்துக்குள், அதாவது சைட்டோபிளாசத்துக்குள் செல்வதற்கு பதிலாக, நேரடியாக செல்லின் மையத்திலுள்ள உடகரு அதாவது நியூக்ளியஸுக்குள் சென்று விடுகிறதாம்.
அங்கே சென்றதும், இந்த கொரோனா வைரஸின் துண்டு உடைந்து, திடீர் மாற்றம் பெற்ற வைரஸை செல்லுக்குள்ளேயே உருவாக்கத் தொடங்கிவிடுகிறதாம். அவைதான் உடலுக்குள் நுழைந்து இரத்தக்கட்டிகளை உருவாக்குகின்றனவாம்.
இந்த விடயத்தை ஜேர்மன் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கான தீர்வையும் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, செல்லுக்குள் நுழைந்த ஜலதோஷ வைரஸில் ஒட்டவைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் துண்டு உடைந்து நியூக்ளியஸுக்குள் செல்வதை தடுத்துவிட்டால் இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம் என்கிறார்கள் அவர்கள்.
அதுவும் சாத்தியமே என்று கூறும் ஜேர்மன் அறிவியலாளர்கள், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இது தொடர்பாக தங்களை தொடர்புகொண்டுள்ளதாகவும், ஆஸ்ட்ராசெனகாவிடம் இதுவரை பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.