டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி
N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்
400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது.
டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.
Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, "I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… pic.twitter.com/cG5eBoftOg
— ANI (@ANI) August 12, 2026
அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது.
இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன்.
முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
பங்குகள் வீழ்ச்சி
சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது.
யார் இந்த என்.சந்திரசேகரன்?
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.
1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |