இது மோடி ஆட்சி, நினைத்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்துவிடுவோம்! பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு
தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து விடுவோம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள தமிழகத்தில் உள்ள பாஜக கட்சியினர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்' என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தனி நாடு பற்றி நான் பேசவில்லை. அது ஆ.ராசாவின் சொந்த கருத்து. ஆனால் என்னுடைய ஆசையும் அது தான். ஆ.ராசாவுக்கு தனி நாடு வேண்டும் என்ற ஆசை இருந்தால் எனக்கும் தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்போது தான் நிர்வாகம் செய்ய முடியும். நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர்.
ஆ.ராசா சொன்ன பிறகே எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இரண்டாக பிரித்தால் இன்னும் பல திட்டங்களை கொண்டு வர முடியும்.
எப்படி ஆந்திரா, தெலங்கானா பிரிந்து இருக்கிறதோ அதேபோன்று தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம் எனவும் கூறினார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.