எனக்கும் என் கணவர் முருகனுக்கும் தொடர் விடுப்பு கொடுங்கள்! நளினி கோரிக்கை... முதல்வரை சந்திக்கும் தாயார் பத்மா
கணவர் முருகனையும் தன்னையும் தொடர் விடுப்பில் விடுவிக்கக்கோரி நளினி மனு அளித்துள்ள நிலையில் அது தொடர்பாக நளினியின் தாயார் பத்மா முதல்வரை சந்திக்கவுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் அவரது மனைவி நளினி இருவரும் மாதம் ஒருமுறை சந்தித்துக்கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது.
அதன்படி ஆண்கள் சிறையிலுள்ள முருகனும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினியும் மாதம் ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர்கள், வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் வாட்ஸ்அப் காலில் பேச அனுமதிக்கவேண்டும் என்று நளினி, முருகன் இருவரும் கோரியபோது சிறை நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்தது.
இதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நளினி அந்த வழக்கில் வெற்றி பெற்றார். வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் வாட்ஸ்அப் காலில் பேச அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கணவர் முருகனுக்கும் தனக்கும் தொடர் விடுப்பு வழங்கக்கோரி முதல்வருக்கு மனு அளித்துள்ளார் நளினி . ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற பிரிவுக்கு அவர் இந்த மனுவினை அளித்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கையும் வைக்க இருக்கிறார் நளினியின் தாயார் பத்மா.
இது குறித்து முருகன், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று இருவரையும் மத்திய சிறையில் சந்தித்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய போது, நளினியின் தாயார் பத்மா இந்த வாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து முருகன் மற்றும் நளினியை தொடர்பில் விடுவிக்கக்கோரி கோரி மனு கொடுக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.