தாய், குழந்தைகள் மர்ம மரணம் - வழக்கில் திடீர் திருப்பம்
நாமக்கல்லில் தாய் குழந்தைகள் மர்ம மரணத்தில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தாய், குழந்தைகள் மரணம்
நாமக்கல் மாவட்டம் பதி நகரில் வசித்து வந்தவர் பிரேம் ராஜா(33). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் மோகனபிரியா(33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு பிரணதி(6) என்ற மகளும், பிரனீஷ்(2) என்ற மகனும் இருந்தனர்.
நேற்று(04.03.2025) மதியம் வரை பிரேம்ராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகனப்பிரியா மற்றும் அவரது குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.
சிக்கிய கடிதம்
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்கிருந்து கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைபற்றினர். அந்த கடிதத்தில், "இணைய மோசடியில் கடந்த 10 நாட்களில் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டேன்.
இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியமில்லை. எனவே நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டோம். எங்களை மனித்துவிடுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் 4 பேரும் தற்கொலை முயற்சி என குறிப்பிட்டுள்ள நிலையில், பிரேம்ராஜ் எங்கே என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. மேலும், பிரேம்ராஜின் கைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
பிரேம்ராஜ் தற்கொலை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. பிரேம்ராஜ் பணியாற்றிய வங்கியில் உடன் பணியாற்றி வந்த பெண் ஒருவருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தொழில் செய்வதற்காக மோகன பிரியாவின் தந்தை வழங்கிய ரூ.6 லட்சத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(03.03.2025) இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, நேற்று மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கரூருக்குச் சென்ற பிரேம்ராஜ், இரவு 10.30 மணியளவில் பசுபதிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேம்ராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மூவரின் உடல் கூறாய்வு அறிக்கையிலே தாய் மற்றும் இரு குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என தெரிய வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |