230க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா.., பூமி திரும்புவதாக நாசா அறிவிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஜூலை 14 ஆம் திகதி பூமிக்குத் திரும்புவதாக நாசா அறிவித்துள்ளது.
230க்கு மேற்பட்ட சூரிய உதயம்
அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4' என்ற மனித விண்வெளி பயணத்திற்கான SpaceX Dragon விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ‘ஆக்சியம் -4' என்ற மனித விண்வெளி பயணத்திற்கான திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உடன் சேர்ந்து குழு உறுப்பினர்களான பெக்கி விட்சன், ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் திபோர் கபு ஆகிய 4 பேர் கடந்த மாதம் 25-ம் திகதி அன்று விண்வெளிக்கு சென்றனர்.
இவர்களின் விண்கலமானது 26-ம் திகதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
14 நாட்கள் பயணமாக சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இதில் சுபான்ஷு சுக்லா புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை தனியாக மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை விண்வெளி நிலையத்தில் முளைக்க வைத்து ஆய்வு செய்து வருகிறார்.
தற்போது, இந்த 4 விண்வெளி வீரர்களின் பயணம் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் ஆக்சியம் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இந்த பயணத்தில் விண்வெளி வீரர்கள் 60-க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள இந்த நாட்களில் மொத்தம் 230-க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ளனர். மேலும், 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வருகிற 14-ம் திகதி பூமிக்குத் திரும்புவதாக நாசா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |