தேசிய சேவைக்கு மறுக்கும் இளைஞர்களுக்கு காத்திருக்கும் பேரிடி: ரிஷி சுனக்கின் திட்டம் அம்பலம்
தேசிய சேவையில் இணைய மறுக்கும் 18 வயது நிரம்பிய பிரித்தானியாவில் இளைஞர்களை தண்டிக்கும் திட்டத்தை ரிஷி சுனக் முன்னெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தண்டிக்கப்படுவார்கள்
குறித்த இளைஞர்களுக்கான பொருளாதார சலுகைகள் அல்லது சாரதி உரிமம் மறுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது. 18 வயது நிரம்பிய பிரித்தானிய இளைஞர்கள் இனி கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது ரிஷி சுனக் கட்சியின் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய சேவை எனப்படும் இந்த திட்டத்தில் இணைய மறுப்போர் தண்டிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் ரிஷி சுனக் தமது திட்டம் குறித்து வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக சாரதி உரிமம், பொருளாதார சலுகைகள் மறுப்பு உட்பட சில தண்டனைகளை இளைஞர்கள் எதிர்கொள்ள நேரிடும். வங்கி அட்டைகள் மறுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரிஷி சுனக், இந்த விவகாரத்தில் ஐரோப்பா முழுவதும் பல்வேறு மாதிரிகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேர்தல் திகதி தொடர்பான சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள ரிஷி சுனக், தம்மை இந்த சம்பவம் கோபப்படுத்தியதாகவும், இது தீவிரத்தன்மை கொண்ட சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திகதி சூதாட்டம்
உரிய சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தபப்ட்டுள்ளதாகவும், எவரேனும் சட்டத்தை மீறினால், கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஏன் அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரிஷி சுனக், முதலில் விசாரணை, அதில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபணமானால், கண்டிப்பாக கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி சூதாட்டம் தொடர்பில், ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், தேர்தல் பரப்புரை நிர்வாகி மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |