பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண் ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த வினய் நர்வாலின் 27 -வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பங்கேற்ற அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். நாம் எந்த சமூகத்தின் மீதும் கோபத்தை திருப்ப கூடாது.
முஸ்லீம்களுக்கு எதிராக மக்கள் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசினார்.
இதற்கு ஹிமான்ஷி ட்ரோல் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வினய் நர்வாலின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
இது கண்டிக்கத்தக்கது. சித்தாந்தங்களை வெளிப்படுத்தியதற்காக ஒரு பெண் ட்ரோல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல. தேசிய மகளிர் ஆணையம் ஒவ்வொரு பெண்ணின் மாண்பையும், மரியாதையையும் பாதுகாக்க விழைகிறது" என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |