ஜேர்மனிக்கு வேலைக்குச் செல்ல விரும்பிய இந்தியர்கள்: ரஷ்யாவில் சிக்கிய பரிதாபம்
ஜேர்மனிக்கு வேலைக்குச் செல்ல விரும்பிய இந்தியர்கள் இருவரை ஏமாற்றி ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளார்கள் ஏஜண்டுகள் சிலர்.
ஜேர்மனியில் வேலைக்குச் செல்ல விரும்பிய இந்தியர்கள்
இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த இரண்டுபேர் ஜேர்மனிக்கு வேலைக்காக செல்ல விரும்பிய நிலையில், அவர்களுக்கு பாங்காக் செல்வதற்கு பயணச்சீட்டைக் கொடுத்துள்ளார் ஏஜண்ட் ஒருவர்.
பாங்காக் சென்றவர்கள், அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்கள் அடித்து உதைக்கப்பட்டு, பணம் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த இருவரில் ஒருவரான முகேஷ் என்பவர், தங்களை அடைத்து வைத்தவர்கள், தங்களுக்கு உணவோ தண்ணீரோ கூட கொடுக்கவில்லை என்கிறார்.
ரஷ்யாவிலிருந்து அவர்களை பெலாரஸ் நாட்டுக்குக் கொண்டு சென்ற அந்த நபர்கள், அவர்களை அடித்து உதைத்து, அவர்கள் குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்து, தாங்கள் கூறும் எண்ணுக்கு பணம் அனுப்பவில்லையென்றால், அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்கள்.
பின்னர் தங்களை ராணுவம் கைது செய்ததாக தெரிவிக்கும் முகேஷ், தங்களை ராணுவத்தில் சேருமாறு வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் 10 ஆண்டுகள் சிறையிலடைப்பதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.
இந்த இளைஞர்கள் இருவரும் ராணுவத்தில் சேர மறுக்கவே, அவர்கள் மாஸ்கோவில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். மாஸ்கோவிலும், ராணுவத்தில் சேருகிறாயா அல்லது நாடுகடத்தவா என மிரட்ட, ராணுவத்தில் சேர மறுத்த தங்களை இந்தியாவுக்கு நாடுகடத்தியதாக தெரிவிக்கிறார் முகேஷ்.
இந்திய பொலிசார், சம்பந்தப்பட்ட ஏஜண்ட்களை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |