அத்தியாவசியப் பொருட்கள் ஆடம்பரமாக கருதப்படும் அபாயத்தில் ஜேர்மனி: மக்களிடையே உருவாகும் எதிர்ப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, ஜேர்மனியில் அத்தியாவசிய பொருட்கள் பயன்பாடே, ஆடம்பரமாக கருதப்படும் ஒரு அபாயம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, வீடுகளை வெப்பப்படுத்துதல் என்பது ஜேர்மனியில் அத்தியாவசியமான ஒன்று. அதுவும் குளிர்காலத்தில் வீடுகளை வெப்பப்படுத்தாமல் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத ஒன்று எனலாம்.
இதுவரை பெரும்பாலும் வீடுகளை வெப்பப்படுத்த எரிவாயுதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை, இனி வீடுகளை வெப்பப்படுத்துவதற்கு என்ன செய்வது என மக்களை கவலைப்படவைத்துவிட்டது.
மின்கட்டணம் ஏற்கனவே உயர்ந்துவிட்ட நிலையில், அக்டோபர் மாதத்திலிருந்து மேலும் அது உயர இருக்கிறது. மக்கள், விறகு, தூக்கிச்செல்லக்கூடிய ரேடியேட்டர்கள், மின் ஹீட்டர்கள் ஆகியவற்றை வாங்கிக் குவிக்க, அவற்றிற்கும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு திட்டங்கள் ஜேர்மனியில் தீட்டப்பட்டுவரும் நிலையில், மீண்டும் மக்களை வீட்டிலிருந்தபடி பணி செய்யவைக்கலாம் என பல நிறுவனங்கள் திட்டமிட்டுவருகின்றன. ஆனால், அதனால் வீடுகளில் உள்ளவர்களுக்கு மேலும் மின்சார பயன்பாடு அதிகரிக்கும்.
இப்படியே போனால், அடிப்படைப் பொருட்கள் கூட ஆடம்பரமாக கருதப்படும் ஒரு நிலைக்கு நாடு பின்னோக்கிச் செல்லக்கூடிய ஒரு அபாயம் உள்ளது. இதற்கிடையில், இப்போதே மக்கள் அரசியல்வாதிகளுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டத்துவங்கியுள்ளார்கள்.
ஜேர்மன் நகரமான Bayreuthஇல் புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவர் மக்கள் முன் உரையாற்ற முயன்றிருக்கிறார். ஆனால், மக்கள் ஊளையிட்டும் விசிலடித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். வரும் நாட்களில் மக்களுடைய தேவைகள் சந்திக்கப்படாவிட்டால், எதிர்ப்புகள் அதிகரிக்கும் ஒரு சூழல் உருவாகலாம்.