ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி தேவைப்படலாம்... காரணம் கூறும் பிரபலம்
அமெரிக்க மக்களுக்கு அடுத்த பல ஆண்டுகளுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர்கள் தேவைப்படலாம் என ஜான்சன் அண்ட் ஜான்சன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாறுபடும் கொரோனா தொற்று வகைகள் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போடவில்லை.
அதிக பாதிப்பால் தடுமாறும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள், அரசாங்கத்தின் மெத்தனத்தால் போதுமான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இதுவரை வாங்கவே இல்லை.
மட்டுமின்றி, மொத்த மக்கள் தொகைக்கு தடுப்பூசி அளிக்கும் வகையில் ஒரு திட்டமிடலும் இந்த நாடுகளில் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் உலக நாடுகள் பல தொடர்ந்து ஆபத்தின் பிடியிலேயே சிக்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கோர்ஸ்கி கூறுகையில், அமெரிக்கர்களுக்கு அடுத்த பல ஆண்டுகள் கொரோனா தடுப்பூசி பூஸ்டர்கள் தேவைப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டு தோறும் காய்ச்சலுக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்வது போன்று, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
இதனிடையே, பொது சுகாதார நிபுணர்களும், இதே கருத்தையை முன்வைத்துள்ளனர். அதில், கொரோனா அடுத்த பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும், ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையிலேயே பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசிக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.