தயவு செய்து கதவை திறங்க... கெஞ்சிய குடும்பம்! வீட்டிற்குள் பூட்டி வைத்த ஈரக்கமற்ற அக்கம்பக்கத்தினர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் சமீப நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து பரவும் என்பதால், மக்களிடையே ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆந்திராவின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர், கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இருவருமே, , தங்களை தாங்களே இருவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் மகன் கடந்த திங்கட்கிழமை வெளியே சென்று, பெற்றோருக்கு தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார்.
மகன் மருந்து வாங்கி வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர் மருந்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றவுடன், அவர்கள் 3 பேரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும், தயவு செய்து கதவை திறந்துவிடுங்க, இப்படி பூட்டிவிட்டால், மருந்து, தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பலமுறை கெஞ்சினர்.
இருப்பினும், யாரும் கதவை திறக்கவில்லை. இறுதியில், தம்பதி பொலிசாருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூற, விரைந்து வந்த பொலிசார், பூட்டை அகற்றி அவர்களை விடுவித்தனர்.
மேலும், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் அழைத்து அறிவுரை வழங்கியதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர்வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர்.