அவர் ஒரு போர்க்குற்றவாளி... நியூயார்க் மேயர் மம்தானி மீண்டும் சூளுரை
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
கைது செய்ய முடியுமா
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, தனது நிர்வாகத்தால் நெதன்யாகுவை கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மம்தானி கூறியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸின் The Interview பாட்காஸ்டின் சனிக்கிழமை அத்தியாயத்தில் மம்தானி தெரிவித்த கருத்துகள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாட்காஸ்டில் பேசிய மம்தானி, பிரதமர் நெதன்யாகு தற்போது ஹேக் (The Hague) நகரில் இருக்க வேண்டியவர் என குறிப்பிட்டுள்ளார். காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக 2024 நவம்பரில் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான பிடிவாரண்டை வெளியிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள டச்சு நகரமாகும் ஹேக்.
நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி; கடந்த பல ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாகவே, பலரும் இத்தகையதொரு கருத்தைக் கொண்டுள்ளனர் எனவும் மம்தானி அந்த பாட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெதன்யாகு போன்ற ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்யுமாறு, தனது மேற்பார்வையில் உள்ள நியூயார்க் காவல் துறைக்கு (NYPD) உத்தரவிடும் சட்டப்பூர்வ அதிகாரம் தமக்கு உள்ளதா என்பது குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மாம்தானி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து நகரின் சட்டத் துறையுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மம்தானி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, நியூயார்க் நகரில் சட்டம் எதைச் செய்ய அனுமதிக்கிறதோ, அதைத்தான் நாங்கள் செய்வோம், ஆனால், அதற்காக னகரத்தின் சட்டத்தை நாங்கள் திருத்தப்போவதில்லை என்றும் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் போருக்கான ஒரு ஆயுதமாக மக்களைப் பட்டினி போடுதல், அத்துடன் கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டி, நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலியத் தலைவர்களைக் கைது செய்ய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்திருந்தது.
ஹமாஸ் ஆதரவாளர்
மம்தானி தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்றும், நெதன்யாகுவை ஒரு போர்க் குற்றவாளி என்றும் சித்தரித்தார்.
மேலும், செப்டம்பர் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு எப்போதாவது நெதன்யாகு நியூயார்க்கில் கால் வைத்தால், அவரைக் கைது செய்யுமாறு நியூயார்க் நகர காவல்துறைக்கு (NYPD) உத்தரவிடுவேன் என்றும் கூறினார்.
ஆனால், மம்தானிக்கு அப்போது பதிலளித்த சட்ட வல்லுநர்கள், நெதன்யாகுவைக் கைது செய்வது மம்தானிக்கு நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் என்றும், அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் விளக்கமளித்திருந்தனர்.

இதனிடையே, மம்தானியின் சூளுரைகளை தாம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ள நெதன்யாகு, அவர் ஒரு ஹமாஸ் ஆதரவாளர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானன் தெரிவிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெருமிதத்துடன் உரையாற்றுவார்;
மேலும், இஸ்ரேலின் உண்மையை எடுத்துரைக்கவும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அதன் அசைக்க முடியாத உரிமையை வலியுறுத்தவும் உலகத்தின் முன் நிற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |