பிறந்த 5 நாட்களில் குழந்தைக்கு பலத்த காயம்! அரசு மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்
தமிழகத்தின் விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் இருந்த கட்டில் திடீரென உடைந்து விழுந்ததில் பச்சிளம் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரின் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி, இவரது மனைவி முத்துலட்சுமி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி, பிரசவத்திற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முத்துலட்சுமிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது, தொடர்ந்து தாய்- சேய் இருவரையும் மருத்துவர்கள் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் பிரசவ வார்டில் தங்கியிருந்த போது, நேற்று நள்ளிரவு திடீரென கட்டில் உடைந்து கீழே விழுந்தது, இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட குழந்தை அலறித்துடித்தது.
இதனால் பதறிப்போன முனியசாமியும் முத்துலட்சுமியும் கூச்சலிட்டு மருத்துவரை அழைத்தனர்.
இரவு நேரம் என்பதால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.