Omicron பரவலைத் தொடர்ந்து உருவாகியுள்ள புதிய கொரோனா அறிகுறிகள் என்னென்ன?
Omicron கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, புதிதாக சில கொரோனா அறிகுறிகள் உருவாகியுள்ளதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக கொரோனா அறிகுறிகள் என கூறப்படும் அறிகுறிகளை விட, தற்போது இந்த புதிய அறிகுறிகள்தான் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
The ZOE COVID study என்னும் ஆய்வு, 2020ஆம் ஆண்டு முதலே, கொரோனாவின் அறிகுறிகளை கவனித்து வருகிறது.
பொதுவாக பலருக்கும் மூக்கில் நீர் வடிதலே முக்கிய அறிகுறியாக இருந்து வந்துள்ளது. கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தவர்களில் 73 சதவிகிதத்தினருக்கு இந்த அறிகுறி இருந்தது.
அதைத் தொடர்ந்து 68 சதவிகிதம் பேருக்கு தலைவலியும், 64 பேருக்கு சோர்வும், 60 சதவிகிதம் பேருக்கு தும்மலும், 60 சதவிகிதம் பேருக்கு தொண்டை அழற்சியும் இருந்துள்ளது.
ஆனால், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்துவிட்டாலே அவை கொரோனா இருப்பதற்கான அடையாளம் என்று கூறிவிடமுடியாது, ஏனென்றால், வேறு சில நோய்கள் உள்ளவர்களுக்கும் இதே அறிகுறிகள் காணப்படுவதுண்டு.
இதற்கிடையில், புதிதாக ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் கொண்டவர்களில் பாதி பேருக்கும் மேல் (51.3 சதவிகிதம்), வேறு நோய்கள் அல்லாமல் கொரோனா இருக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.
Omicron வகை கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில், சமீபத்தைய சில நாட்களாக பிரித்தானியர்கள் இந்த அறிகுறிகளையே தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வு மேற்கொண்டவர்களில் ஒருவரான லண்டன், King’s கல்லூரியில் பணியாற்றுபவரும் அறிவியலாளருமான Dr Claire Steves கூறும்போது, இவை ஜலதோஷம் போன்ற அறிகுறிகள், ஆனால், அவைதான் தற்போது கொரோனா நோயாளிகளிடம் அதிகம் காணப்படுகின்றன.
ஆனால், கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாக கருதப்படும் காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றன என்கிறார்.
கொரோனாவின் 20 அறிகுறிகளில், வாசனை இழப்பு என்னும் அறிகுறி, தற்போது 17ஆவது இடத்துக்கு சென்றுவிட்டதாக Dr Stevens தெரிவிக்கிறார்.
இருமல் என்னும் அறிகுறி ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், காய்ச்சல் 10ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.
2020 வசந்த காலத்திலிருந்து, இந்த மூன்று அறிகுறிகளும்தான் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHSஆல் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டன. இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்குத்தான் கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ZOE அமைப்பின் நிபுணர்கள், புதிய தரவுகளுக்கேற்றாற்போல் கொரோனா அறிகுறிகளுக்கான அதிகாரப்பூர்வ பட்டியலை மாற்றுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்கள்.
ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகளோ அப்படி செய்வதைத் தவிர்த்துவந்தார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், சோர்வும் தலைவலியும் கொரோனாவுக்கான தனிப்பட்ட அறிகுறிகள் என பட்டியலிடப்பட்டால், அந்த அறிகுறிகள் கொண்டவர்கள் எல்லாரும் கொரோனா பரிசோதனை மையங்களில் மக்கள் வந்து குவிந்துவிடலாம் என்பதால் அவற்றைத் தவிர்த்துவந்தார்கள்.
முக்கியமான விடயம் என்னவென்றால், Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், பெரும்பாலும், குறிப்பாக தடுப்பூசி பெற்றவர்கள், ஜலதோஷம் போன்ற அறிகுறிகளைத்தான் கொண்டிருந்தார்கள் என்கிறார் Dr Stevens.
ஆகவே, உங்களுக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லை என்பது போலத் தோன்றினால், கண்டிப்பாக ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறும் Dr Stevens, உங்கள் வீட்டில் வாழாதவர்களாகிய யாரையாவது சந்திக்கச் செல்லும் முன், உங்களுக்குக் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள், ZOE COVID ஆப்பில் உங்கள் அறிகுறிகளை உள்ளிடுங்கள், நாங்கள் உங்களை பிசிஆர் பரிசோதனைக்கு அழைப்போம், உங்களுக்கு Omicron வகை கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம் என்கிறார்.
கொரோனா அறிகுறிகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற அறிகுறிகள், கரகரப்பான குரல் மற்றும் குளிரால் உடல் நடுங்குதல் (chills or shivers) ஆகியவையாகும்.
அதாவது செய்தியின் சாராம்சம் என்னவென்றால், முன்பு கூறப்பட்டது போல, காய்ச்சல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல், வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகள் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகள் என்று எண்ணிக்கொண்டிருக்காமல், ஜலதோஷத்தின் அறிகுறிகள் காணப்பட்டாலும் கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
காரணம், Omicron வகை கொரோனா தொற்று தடுப்பூசி பெற்றவர்களையும் தாக்குகிறது. அப்படி தாக்கும்போது, அவர்களுக்கு கொரோனாவின் தனிப்பட்ட அறிகுறிகள் என பட்டியலிடப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் தோன்றுவதில்லை. சாதாரண ஜலதோஷம் போன்ற அறிகுறிகள்தான் தோன்றுகின்றன என்பதால்தால் இந்த பரிந்துரை!