சுடுகாடாக மாறிய பூங்கா! குவிக்கப்படும் சடலங்கள்... வெளியான புகைப்படம்
கொரோனா பெருந்தொற்றால் இந்திய தலைநகர் டெல்லி விழிபிதுங்கியுள்ள நிலையில் 10 ஏக்கரில் கூடுதலான தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள தகன மேடைகளிலும், அடக்கஸ்தலங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதனால் பல மணி நேரங்கள் தாமதமாவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதைச் சமாளிக்க டெல்லியின் வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மங்கோல்புரியில் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி, அப்பகுதியில் ஐந்து ஏக்கரில் புதிதாக இந்துக்களுக்காகத் தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. 3 மற்றும் 2 ஏக்கரில் முறையே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக அடக்கஸ்தலங்களும் அமைகின்றன.
இதுகுறித்து வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயரான ஜெய்பிரகாஷ் கூறும்போது, கொரோனா சூழல் முற்றிலுமாக மாறி இறப்புகள் கூடிவிட்டன.
உறவுகளை இழந்ததோடு அல்லாமல் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளுக்காகவும் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதைப் போக்க மொத்தம் பத்து ஏக்கரில் தகன மேடைகள், அடக்கஸ்தலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பிலும் மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் தென்கிழக்கு டெல்லியில் பூங்கா ஒன்று சுடுகாடாக மாறியுள்ளது. அதாவது தென் - கிழக்கு தில்லியின் சாராய் காலே கான் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா தகன மேடைகளாக மாறியுள்ளது.