பிரித்தானியர் வாங்கிய வீட்டின் சுவருக்குள் இருந்த அந்த பொம்மை: எழுதப்பட்டிருந்த திகிலை ஏற்படுத்தும் வார்த்தைகள்...
கடந்த வெள்ளிக்கிழமைதான் தான் புதிதாக வாங்கிய அந்த வீட்டுக்கு குடிபோனார் அந்த பிரித்தானியர்...
Jonathan Lewis (32), இங்கிலாந்திலுள்ள Walton என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை வாங்கி உள்ளே நுழைந்தபோது, அந்த வீட்டிலுள்ள ஒரு இடத்திலிருந்து ஒயர் ஒன்று வெளியே வருவதைக் கவனித்துள்ளார்.
ஆக, அங்கே ஒரு வெற்றிடம் இருப்பதை புரிந்துகொண்ட அவர் அந்த சுவரைத் தட்ட, சுவர் உடைந்து வந்திருக்கிறது. அது பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்பட்ட போலிச் சுவர்.
அந்த சுவரில் ஏற்படுத்திய துவாரம் வழியாக உள்ளே பார்த்தால், அதற்குள் ஒரு பொம்மை இருந்திருக்கிறது. பொம்மையை அவர் வெளியே எடுக்க, அந்த பொம்மையுடன் ஒரு கடிதம் இருந்திருக்கிறது.
வேறு யாராவது அந்த கடிதத்தைப் பார்த்திருந்தால், பயந்துபோய் உடனே அந்த வீட்டைக் காலி செய்திருப்பார்கள்.
ஆம், அந்த கடிதத்தில், ’இந்த வீட்டை புதிதாக வாங்கியவருக்கு, என் பெயர் எமிலி, என்னை விடுவித்ததற்காக நன்றி.
என்னுடைய உரிமையாளர்கள் இந்த வீட்டில் 1961ஆம் ஆண்டு வசித்தார்கள். அவர்கள் எப்போது பார்த்தாலும் பாட்டுப்பாடிக்கொண்டு ஜாலியாக இருந்தார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அவர்களைக் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டேன்.
உங்கள் வீட்டிலும் கத்திகள் இருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் நன்றாக தூங்குவீர்கள் என்றும் நம்புகிறேன்’ என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த விடயம் தெரியவந்ததும், Lewisஇன் நண்பர்கள் உடனடியாக அந்த வீட்டை விற்றுவிடும்படி அவரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ள Lewis, இந்த வீட்டிலுள்ள சமையலறையைக் கட்டியே ஐந்து ஆண்டுகள்தான் ஆனதாக இந்த வீட்டின் ஏஜண்ட் தெரிவித்தார். அத்துடன், அந்த கடிதம் எழுதப்பட்ட காகிதமும் புதிதாக இருக்கிறது. ஆகவே, யாரோ சமீபத்தில்தான் இதைச் செய்திருக்கவேண்டும், நான் வீட்டையெல்லாம் விற்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.