வங்கக்கடலில் மீண்டும் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் கனமழை?
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், வரும் 22 -ம் திகதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யவுள்ளது.
அதன்படி, இன்று (டிசம்பர் 17) புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல நாளை (டிசம்பர் 18) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (டிசம்பர் 19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |