குப்பையில் வீசப்பட்ட அலமாரிக்குள் இருந்த பிறந்த குழந்தை! புகைப்படம் வெளியிட்ட பொலிஸ்
அமெரிக்காவில் குப்பையில் வீசப்பட்டிருந்த ஒரு அலமாரியின் டிராயருக்குள் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் Illinois மாகாணத்தில் உள்ள சிகாகோவில் நகரத்தில், செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிகாகோவின் மாண்ட்க்ளேர் சுற்றுப்புறத்தில் உள்ள நார்த் ஓக் பார்க் அவென்யூவின் 2300-தொகுதியில், குப்பை தொட்டிக்கு அருகே ஒரு டிரஸ்ஸர் டிராயரில் ஒரு புதிதாக பிறந்த குழந்தை கிடப்பதை அவ்வழியே சென்ற ஒரு பெண் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உடனடியாக உதவிக்காக துணை மருத்துவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த குழந்தையை ஒப்படைத்துள்ளார்.
தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத அப்பெண், தான் அவ்வழியே தனியாக வந்து கொண்டிருந்த போது, அங்கு தெருவோரம் விடப்பட்டிருந்த ஒரு அலமாரியை பார்த்து, அதை எடுத்துச்சென்று சீர் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அருகில் நெருங்கியதாக கூறினார்.
அப்போது அந்தக் குழந்தை ஜெபமாலை மணிகளால் மூடப்பட்டு அலமாரி டிராயரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், குழந்தை வாயில் வாந்தியுடன் காணப்பட்டதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பிறந்து ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் என்று அதிகாரிகள் கூறிய அந்தக் குழந்தை, லூரி குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில், குழந்தையின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டு, குழந்தையின் பெற்றோர் குறித்த தகவலை அறிந்துகொள்ள முயற்சித்து வருகின்றனர்.
சிகாகோவில் தற்போது பிற்பகல் நேரத்தில் சுமார் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் நிலையில், அப்பெண் மட்டும் குழந்தையை கவனிக்காமல் இருந்திருந்தால், குழந்தை இறந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.