திருமணமான 2 மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட இளம் புதுமணத்தம்பதி! கண்ணீர் சம்பவம்
தமிழகத்தில் திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்தவர் சேதுபதி (27). இவருக்கும் திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த மோனிஷா (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அரியலூரிலேயே சேதுபதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது.
திருமணம் முடிந்து 2 மாதங்களிலேயே கணவர் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த மோனிஷா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷாவின் உறவினர்கள் சேதுபதி வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றனர்.
அங்கு இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சீர் வரிசை பொருட்களை எடுக்க வந்தவர்களை சேதுபதி குடும்பத்தினர் சிறை வைத்தனர். பின்னர் செல்போன் மூலம் தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்து வந்தனர். கணவர் இறந்த சோகத்தில் இருந்த மோனிஷா அடுத்தடுத்து இரு குடும்பத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மேலும் கவலையடைந்தார்.
இதனால் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொலிசார் மோனிஷாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.