தேனிலவுக்கு சென்ற இடத்தில் பயங்கரம்: பிரித்தானிய புதுமணப்பெண் சடலமாக மீட்பு
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமணப்பெண் மலை முகட்டில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை மொத்தம் உலுக்கியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 31 வயதான ஃபவ்ஸியா ஜாவேத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொண்டாடிய சில நாட்களிலேயே எடின்பர்க் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் Arthur’s Seat மலை முகட்டில் இருந்து ஃபவ்ஸியா ஜாவேத் தவறி விழுந்துள்ளதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து, மீட்புக்குழுவினர், பொலிசார், அவசர மருத்துவ உதவிக்குழுவினர் என அனைவரின் போராட்டமும் வீணானதுடன், ஃபவ்ஸியா ஜாவேத் சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்கு யார்க்ஷயர் பகுதியில் குடியிருந்து வந்த ஃபவ்ஸியா கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் வரையில் தொண்டு நிறுவனங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஞாயிறன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை கொண்டாடிவிட்டு, ஸ்கொட்லாந்துக்கு ரயிலில் பயணமாகியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஃபவ்ஸியா கருவுற்றிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஃபவ்ஸியா மரணம் தொடர்பில் 27 வயதான இளைஞர் ஒருவரை ஸ்கொட்லாந்து பொலிசார் கைது செய்துள்ளதாகவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.