கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 100 டொலர் பரிசு வழங்கப்படும்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க்கில், கொரோனா பரவலை குறைக்கும் விதமாக, தடுப்பூசி போட்டுக் கொண்டால், 100 டொலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடுகளின் வரிசையில் அமெரிக்கா உள்ளது. இதனால் ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்த கொரோனாவைக் கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது.
இந்தியாவில் கண்டுபிடிக்கபப்ட்ட டெல்டா வகை வைரஸ் பரவலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டொலர் பரிசு என அந்நகர மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார்.
ஜூலை 30 முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டொலர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.