அடுத்த வகை கொரோனா வைரஸ் இந்த உயிரினத்திடம் இருந்துதான் பரவும்: அச்சம் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்
நியூயார்க்கில் எலிகள் உடலில் ஒரு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் எலிகளிடமிருந்து பரவலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
விலங்குகளிடம் கோவிட் காணப்படுவது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். காரணம், அது விலங்குகளிடம் பரவுவது கவனிக்கப்படாமலே விடப்பட்டு, பின்னர் புதிய ஒரு வகை கொரோனா வைரஸாக மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பதுதான்.
ஆய்வாளர்கள் எலிகளின் எச்சத்தை ஆய்வுக்குட்படுத்தியபோது, அவற்றில் கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். சாக்கடையிலிருந்து அந்த எலிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
எலிகள் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து, மனித மலத்தை உண்ணுவதால் அவற்றிற்கு மனிதர்களிடமிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
தாங்கள் சாக்கடையில் இதுவரை உயிருள்ள கொரோனா வைரஸைக் கண்டறியவில்லை என்றாலும், சாக்கடை நீரின் அளவையும் எலிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது அவை அங்கிருந்துதான் கொரோனா வைரஸைப் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் அவர்கள்.
இப்போதைக்கு இந்த விடயத்தைக் கணிக்கத்தான் முடியும் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், ஆனால், நியூயார்க்கில் காணப்படும் இந்த எலிகளிடமிருந்துதான் அடுத்த வகை கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.