குளிக்கும் தண்ணீரில் கிருமிகள்... உயிரிழந்த நோயாளி: மருத்துவமனைக்கு அபராதம்
பிரித்தானியாவில், புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், குளிக்கும் தண்ணீரில் இருந்த கிருமிகளால் ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு 300,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காக...
2022ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் திகதி, புற்றுநோய் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் Gloucestershireஇலுள்ள Cheltenham அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், Dr. கிறிஸ் எலியட் (Dr Chris Elliot, 59).

ஆகத்து மாதம் 1ஆம் திகதி, எலியட்டின் அறையிலுள்ள குளியலறையில் உள்ள ஷவரில், சூடோமோனாஸ் எருஜினோசா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விடயம் தெரியவந்தும், அதை சரி செய்ய மருத்துவமனை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகத்து மாதம் 23ஆம் திகதி, சூடோமோனாஸ் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டார் எலியட்.
அவர் உயிரிழந்தபின்பு, மீண்டும் ஆகத்து மாதம் 26ஆம் திகதி, எலியட் தங்கியிருந்த அறையிலுள்ள குளியலறையில் உள்ள அந்த ஷவரை சோதனைக்கு உட்படுத்தும்போது, அப்போதும் அதே சூடோமோனாஸ் நோய்க்கிருமிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து எலியட்டின் மனைவியான விக்டோரியா எலியட், மருத்துவமனை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தன் கணவரை பாதுகாக்க மருத்துவமனை தவறிவிட்டது என்றும், தன் கணவருக்கு அலட்சியத்துடனும் பாதுகாப்பு தொடர்பில் திறமையின்மையுடனும் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார் அவர்.
அந்த வழக்கில், மருத்துவமனை தன் கடமையில் தவறிவிட்டதாகவும், தவிர்க்கக்கூடிய ஒரு அபாயத்தை தவிர்க்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்த நீதிபதி நிக் (Nick Wattam), மருத்துவமனைக்கு 300,000 பவுண்டுகள் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கான கூடுதல் கட்டணமாக 2,000 பவுண்டுகளும், வழக்குச் செலவுக்காக 22, 143.47 பவுண்டுகளும் மருத்துவமனை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |