பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இலங்கை கடற்படை மாலுமிகள் மாயம்! வெளியான பரபரப்பு தகவல்
ரிம் ஆஃப் தி பசுபிக் பயிற்சியில் இணைவதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை கடற்படையின் ஒன்பது மாலுமிகள் அங்கேயே இருக்க முடிவு செய்து கப்பலில் இருந்து குதித்து மாயமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய சர்வதேச கடற்படைப் பயிற்சியான RIMPAC 2022-ல் இணைவதற்காக ஜூன் மாதம் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட 50 பேர் கொண்ட குழுவில் மாலுமிகள் இருந்தனர்.
RIMPAC பயிற்சிக்குப் பிறகு, சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு வெளிநாட்டு இராணுவ உதவி ஒப்பந்தத்தின் கீழ் புதிய கடற்படைக் கப்பலாக இலங்கைக்கு மாற்றப்படவிருக்கும் USCGC Douglas Munro கப்பலில் உதவ திட்டமிடப்பட்டனர். இந்தக் கப்பல் அமெரிக்காவில் மறுசீரமைப்பிற்கு உட்பட்டுள்ளது, விரைவில் இலங்கை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கப்பலில் பணியாற்றிவந்த நிலையில், 9 இலங்கை கடற்படை மாலுமிகள் அங்கிருந்து தப்பியதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இது தொடர்பாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளது.
மேலும், "அமெரிக்க குடியேற்றச் சட்டங்களை மீறும் நபர்கள் கைது, தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருப்பவர்கள் 10 ஆண்டுகள் வரை அமெரிக்காவுக்குத் திரும்ப வரமுடியாமல் தடுக்கப்படலாம்" என்று அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.