'நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வார்' - நீதிமன்றத்தில் நிரவ் மோடி வழக்கறிஞர் தகவல்
வங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வரும் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தினால், அவர் அங்கு தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இருப்பதாக லண்டன் உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமுவேல் கூஸி (Samuel Goozee) உத்தரவிட்டார். அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி தரப்பு மனுதாக்கல் செய்தது.
அந்த மனு, விசாரணைக்கு வந்த போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ்மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்திருப்பதாகக் கூறினார்.
அவரை அடைக்க திட்டமிட்டுள்ள மும்பை சிறையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.