2009 இல் 3 மணி நேர உண்ணாவிரதம் நாடகம் - திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்
2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானம் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.
கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என பேசினார்.
இதனையடுத்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், "தங்கள் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைப்பெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும் தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம்
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.

கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழக முதல்வர் மட்டுமே. இன்று தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் முதல்வரின் குரலாக இருக்கும்.
ஒரு சிலருக்கு திடீர் தமிழ் தமிழர் பாசம் இருக்கும் இதெல்லாம் நாம் வரலாற்றில் பார்த்தது தான்.
2009 ஆம் ஆண்டில் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்விகளில், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என பேசினார்.
இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சரை உட்கார சொன்ன சபாநாயகர் தீர்மானம் தவிர்த்து மற்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |