இலங்கை அணிக்கு மீண்டும் வருகிறாரா மலிங்கா? ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த விடை: தேர்வு குழுவில் இருப்பவர் விளக்கம்
உலகக்கோப்பை டி20 தொடரில் இலங்கை அணிக்காக மலிங்கா மீண்டும் விளையாடவுள்ளார் என்று செய்தி வெளியான நிலையில், அது குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் மலிங்கா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
உலகக்கோப்பை டி20 தொடரும் நெருங்கி வருவதால், மலிங்கா இலங்கை அணிக்கு நிச்சயம் தேவை, அவரின் அனுபவம் அணியின் வெற்றிக்கு உதவும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இலங்கை ரசிகர்களும் அதைத் தான் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இலங்கை அணியின் தேர்வு குழுவில் இருக்கும் விக்ரமசிங்கே கூறுகையில், உலக அளவில் மலிங்கா ஒரு சிறந்த டி20 வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய அனுபவம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது.
ஆனால், இலங்கை அணிக்கு தேர்வு செய்வதில் சில விதிமுறைகள் இருக்கிறது. இதனால், நான் உடனடியாக மலிங்காவை தொடர்பு கொண்டு இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாட உங்களிடம் நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் கடந்த ஓராண்டாக நான் கிரிக்கெட் விளையாட வில்லை என்று கூறினார். நான் அவரிடம், உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் தான் தேசிய அணிக்கு தகுதி பெறமுடியும்.
இதை செய்தால் தான் உங்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்றும் ஆலோசனை கொடுத்தேன். அதன் பிறகு அவர் எங்களுடைய தேர்வு கொள்கைகளை மதித்து அதற்கு உடன்படுவதாக கூறினார். ஆனால் அவர் விளையாடுவாரா? விளையாடமாட்டாரா? என்பது குறித்து என்னிடம் தெளிவாக எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கூறினார்.
இதனால் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவரை உலகக்கோப்பை டி20 தொடரில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது,