இனி சலுகைகள் இல்லை... ட்ரம்பால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு பேரிடி
ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 30 நாட்கள் அவகாசம் பெற்றுள்ளது.
சலுகைகள் இல்லை
இந்த முறை இந்தியாவிடம் இருந்து ரஷ்யா அதிக விலை வசூலிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிப்ரவரி மாதம் நடந்த வர்த்தகத்தில் பீப்பாய் ஒன்றிற்கு 13 டொலர் வரையில் சலுகை அளித்து வந்த ரஷ்யா தற்போது அதிக விலையில், அதாவது பீப்பாய் ஒன்றிற்கு 96 முதல் 98 டொலர் வரையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியா துறைமுகங்களில் வந்து சேரும். சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரி 28 அன்று HPCL நிறுவனத்திற்கு இரண்டு கப்பல் ரஷ்ய எண்ணெயை பீப்பாய் ஒன்றிற்கு 13 டொலர் தள்ளுபடியில் ரஷ்யா வழங்கியுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக விநியோக நெருக்கடிக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளை உடனடியாக வாங்க முடிவு செய்துள்ளன.
மட்டுமின்றி, இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாங்க சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப், பாரத் பெட்ரோலியம் கார்ப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை ரஷ்ய வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதுவரை சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை வர்த்தகர்களிடமிருந்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலவரையறைக்குட்பட்டது
இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களில் ஒருவர், இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் ரஷ்ய சந்தைக்கு திரும்பியுள்ளனர், ஆனால் விலை அதிகம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
வியாழக்கிழமை, அமெரிக்க கருவூலத் துறை இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளித்தது, இதன் மூலம் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க முடியும்.
உக்ரைனில் நடந்து வரும் போரின் போது, ரஷ்யாவிற்கு நிதி அளிப்பதை கட்டுப்படுத்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்துமாறு இந்தியாவை அமெரிக்கா பல மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு ஏற்கனவே கடலில் சிக்கியுள்ள உள்ள எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும், இந்த நடவடிக்கை கண்டிப்பாக காலவரையறைக்குட்பட்டது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஈரான் மோதல் காரணமாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒப்புதல் கோரி இந்தியா ட்ரம்ப் நிர்வாகத்தை அணுகியது.
இந்தியாவிடம் சுமார் 25 நாட்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, மேலும் அதன் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் மத்திய கிழக்கிலிருந்து ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது.
இந்த நிலையில், தற்போது ட்ரம்பின் அனுமதியுடன் ரஷ்யாவை நாடிய இந்தியாவிற்கு, சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என ரஷ்ய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்திய தரப்பு தற்போது ட்ரம்பால் அதிக விலைக்கு ரஷ்யா எண்ணெய் இறக்குமதிக்கு தயாராகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |