அகதிகளுக்கு இனி இடமில்லை: ஜேர்மன் நகரங்கள் சிலவற்றின் நிலை...
உக்ரைன் போர் நீண்டுகொண்டே செல்லும்நிலையில், அகதிகளாக வருபவர்களை தங்கவைக்க பல ஜேர்மன் நகரங்களில் இடம் இல்லை.
அகதிகளாக வந்தவர்களை நிரந்தரமாக உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற கட்டிடங்களில் தங்கவைக்கவும் முடியாது.
அகதிகளை இருகை நீட்டி வரவேற்பதில் பெயர் பெற்ற ஜேர்மனியின் நகரங்கள் சில, இனி அகதிகளுக்கு இடமில்லை என்று கூறும் நிலையை எட்டிவிட்டன.
அகதிகளுக்கு மனதில் இடம் கொடுக்க பலர் இருக்கிறார்கள். ஆனால், உக்ரைன் போர் நீண்டுகொண்டே செல்லும்நிலையில், தொடர்ந்து அகதிகள் ஜேர்மனிக்கு வந்துகொண்டே இருக்க, உண்மையாகவே அவர்களைத் தங்கவைக்க இடம் இல்லை.
விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகிய பிரச்சினைகளில் மக்கள் சிக்கித் தவிப்பதால், தங்கள் வீடுகளில் அகதிகளைத் தங்கவைக்கும் நிலையில் பலர் இல்லை.
ஆகவே, உடற்பயிற்சிக்கூடம் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் உக்ரைனிலிருந்து அகதிகளாக வந்தவர்கள்.
ஆனால், உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவது போல் தோன்றவில்லை. ஆகவே, வந்தவர்களை நிரந்தரமாக உடற்பயிற்சிக் கூடங்களில் தங்கவைக்கமுடியாது. அவர்களுக்குத் தேவை, வாழ ஒரு வீடு, பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், பெற்றோர் வேலைக்குச் சென்றால் பிள்ளைகள் தங்க பகல் நேரக் காப்பகங்கள், போரைக் கண்டு பயந்துபோய் வந்திருக்கும் சிறுவர்கள் முதலானோருக்கு மன நல அலோசனை அளிக்கும் மையங்கள் என தேவை நீண்டுகொண்டே செல்கிறது.
ஆனால், ஜேர்மனியிலுள்ள Aachen போன்ற நகரங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் கூட நிரம்பி வழிகின்றன.
சில கட்டிட உரிமையாளர்கள் அகதிகளுக்கு என்றால், வீடு கொடுக்க மறுக்கும் நிலைமையும் காணப்படுகிறது.
இருந்தாலும், அகதிகள் ஆதரவு அமைப்புகளை நடத்தி வரும் Michaela Lee முதலானோர், எப்படியும் அகதிகளுக்கு தங்குமிடமும், ஏதாவது தொழிற்பயிற்சியும் கிடைக்க தங்களாலான முயற்சிகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.