ஜேர்மனியின் மிகப்பெரிய திருவிழா இந்த ஆண்டும் ரத்து: பிரதமர் அறிவிப்பு
ஜேர்மனியின் முனிச் நகரில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய திருவிழாவான Oktoberfest இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகமெங்கிலும் உள்ள பயணிகளை ஈர்க்கும் ஜேர்மனியின் மிகப்பெரிய திருவிழாவான Oktoberfest இந்த முறை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பவேரியாவின் பிரதமர் மார்கஸ் சோடர் தெரிவித்துள்ளார்.
திங்களன்று முனிச் மேயர் Dieter Reiter என்பவருடன் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் மார்கஸ் சோடர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பவேரியா மாகாணத்தில் வேறு எந்த மிகப்பெரிய திருவிழாக்களும் தற்போதைய சூழலில் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகிலேயே மிக அதிக மக்கள் கூட்டம் கலந்து கொள்ளும் திருவிழாக்களில் ஒன்று முனிச் நகரில் முன்னெடுக்கப்படும் Oktoberfest.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியன் மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது முறை ரத்து செய்யப்படுவது, தனிப்பட்ட முறையில் தம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ள நகர மேயர்,
வேறு வழியில்லை என்பதையும் தற்போதைய சூழலில் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.