இந்தியாவில் இரட்டை கோபுரம் இன்று தகர்ப்பு! குதூப் மினாரை விட உயரம்.. ஏன் இடிக்குறாங்க தெரியுமா?
நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுகிறது.
விதிமுறையை மீறி கட்டப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து தகர்ப்பு
இந்தியாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுகிறது.
நொய்டாவில் சூப்பர்டெக் நிறுவனத்தால் விதிமீறிக் கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின், எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.
இரட்டை கட்டடங்களை இடிப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் மற்றும் விமானங்கள் பறக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டை கோபுர கட்டடத்தின் உள் பகுதியில் சுமார் 20,000 இடங்களில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டுள்ளன. மதியம் 2.30 மணிக்கு கட்டட தகர்ப்புப் பணி தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வெறும் ஒன்பதே விநாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் தரைமட்டமாகி விடும் என, இந்தப் பணியை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகர்க்கப்பட உள்ள இரட்டை கட்டடத்தை சுற்றி 225 டன்கள் கம்பி வலையும், 110 கிலோ மீட்டர் நீளத் துணியும் பல அடுக்குகளாக சுற்றப்பட்டுள்ளது. கட்டடம் தகர்க்கப்படும் போது அதில் இருந்து சிதறும் கான்கிரீட் துகள்கள் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி, ஒரு கட்டடத்தில் 14 தளங்களும், மற்றொரு கட்டடத்தில் 9 தளங்களும், கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 2012ம் ஆண்டு அந்த திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டடங்களிலும் 40 தளங்கள் வரை கட்டுவதற்கு நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது. இது விதிமீறல் எனக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு அடுக்குமாடி கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கட்டத்தை இடிக்கும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. ரூ.20 கோடி செலவில் இந்த கட்டங்கள் இடிக்கப்படுகிறது.
குறித்த கட்டிடம் வரலாற்று சிறப்பு வாய்ந்த குதூப் மினாரை விட உயரம் என்பது குறிப்பிடத்தக்கது.
economictimes