மயில் முட்டையில் ஆம்லெட் செய்து சாப்பிட்ட 4 பேர் கைது!
இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் தேசியப் பறவையான மயிலின் முட்டைகளை பொறித்து உண்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பிராம்பூர் கிராம வாசிகள், மயில் முட்டையைப் பயன்படுத்தி ஆம்லெட் தயாரித்ததாக ஒருவர் மீது புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் படி, அப்பகுதியில் 'முன்னா' என்பவற்றின் நிலத்தில், ஒரு பெண் மயில் 4 முட்டைகள் போட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
அந்த நான்கு முட்டைகளில் ஒன்றை முன்னா திருடி, அதனை உடைத்து ஆம்லெட் போட்டதாகவும், பின்னர் அவரது நான்கு நண்பர்கள் அதை உட்கொண்டனர் என்றும் கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படியில், பொலிஸார் குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பட்டியல் 1-ன் கீழ் மயில் ஒரு பாதுகாக்கப்பட்ட பறவை. மயில்களை வேட்டையாடுவது மற்றும் சாப்பிடுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.
இப்புகாரின் நால்வர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 3 முதல் 7 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் அல்லது ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.